Friday 30 December 2016

சுருளி அருவி - தேக்கடி- குமுளி - மலையோரத்து பயணம்-2. ( A Ride to Suruli Falls- Thekkady- Kumily Hill Ride) Part II

 ...கடந்த  பதிவின் தொடர்ச்சி...

மயிலாடும் பாறை வழியே ஓர் உற்சாக பயணம் (a Yathra Via Mayiladum Paarai)
                     
           மலைப்பாதை கடந்து சமவெளி சாலையில் வேகத்துடன் பறந்தது பாலஸ், மயிலாடும் பாறை ஊரை தொட்டது.  இந்த ஊரின் பெயரை நாம் தமிழ் சினிமா பாடல்களில் கேட்டிருப்போம் நினைவிருக்கிறதா...?* பெயர் கேட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்க்கையில் உற்சாகம். அங்குள்ள ஒரு ஹோட்டலில் காலை பலகாரம் முடித்து விட்டு, குமுளி பயணத்தை தொடர்ந்தோம். சில்லென்ற காற்று வருட அடித்த வெயில் தெரியவில்லை, சிறு குன்றுகள், சாலையை தொடர்ந்த தென்னை மரத்தோப்புகளின் நிழல், பயணத்தை இனிமை செய்தது, வளைவு, நெளிவுகளை கொண்ட ஒரு நதி போல நடந்தது சாலை, வழியில் தெரிந்த காட்சிகளை கண்டவாறே செல்கையில் எம்மை நிறுத்தியது ஒரு கம்மங்கூழ் கடை 

             
 சாலையோர கூழ் கடை- A Road Side Porridge Shop (Bulrush, Ragi)
கூழினை சொம்பில் ஊற்றும் கடைக்காரர் -Shop Owner Served the Millet Porridge Varieties

               கடையில் இரண்டு  பெரிய மண்பானைகளில் தமிழனின் அமுத உணவு  கம்மங்கூழ், கேப்பைக்கூழ் (கேழ்வரகு கூழ் ) மற்றும் மோர் தயாராய் இருந்தது, கடை நடத்தி வரும் பெரியவர் ஒரு முகமன் செய்துவிட்டு என்ன வேண்டும் ? என கேட்டார், ஒரு செம்பு என்ன விலை ? என கேட்க , அவர் 10 ரூபாய் என்று சொல்ல , ஆச்சர்யப்பட்டு விட்டு... (மற்ற ரோட்டோர கடைகளில் குறைந்தது 15 ரூபாய் வாங்குகிறார்கள்) இரண்டு செம்பு கம்மங்கூழ் சொன்னோம். இரண்டு செம்புகளில், அரிந்து வைத்திருந்த   பொடி உள்ளிகளை  போட்டு, மோர் கொஞ்சம் ஊற்றி, பானையில் வைத்திருந்த கம்மங்கூழ் கரைசலை ஊற்றி, கரைத்து விட்டு, கொஞ்சம் உப்பு சேர்க்கையில், கூழின் மணம் நாசியை துளைத்து, ஏற்கனவே  நாங்கள் சாப்பிட்டிருந்த போதும் பசியை தூண்டியது .. கூடவே தக்காளி, பல்லாரி (பெரிய வெங்காயம் ) மிளகு சேர்த்த தொடுகறி, கடிக்க, வறுத்த சீனிஅவரைக்காய், சுண்டை வத்தல், உடன் வத்தல் பொடி, உப்புசேர்த்து, பொடியாக நறுக்கிய மாங்காய் கோஸ், ஊறுகாய்  மற்றும் பப்படப்பூ.   இவைகளை கடித்து, தொட்டு, கூழ் குடிப்பது தனி சுகம்,       மோர்+கூழ் = அமுதம், இதை தவிர வேற ஏதும் எழுத தோணல.. அத்தனை ருசி..

மணம் வீசும் கம்மங்கூழ் Bulrush / Spiked Millet Porridge or Kammangoozh

கம்மங்கூழ் குடிக்க தரப்பட்ட தொடுகறிகள். A Side Dish for Porridge (Cluster Bean Fry and Slied Mango with Salt & Red Chilly Powder, and Onion, Tomato Masala Mixed Rytha)

கம்மங்கூழ் ரசித்து குடிக்கும் ryder இளங்கோ 

            கம்மங்கூழ் குடித்துக் கொண்டே கடை நடத்தி வரும், பெரியவரிடம், கூழ் எவ்வாறு தயார் செய்வது என்று கேட்டோம், அவரும் சுவை பட கூறினார்.. கூழ் காய்க்க தேவையான கேப்பை, கம்பு, இவற்றை காலையில் தண்ணீரில் ஊற வைத்து, சாயங்காலம், ஆட்டு உரல், இல்லனா கிரைண்டர்-லயோ அரைத்து முழு மாவாக்கமால், இடை பதத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, காய்த்து ராத்திரி முழுவதும் வைத்துக்கொள்ளவேண்டும். மறுநாள் காலையில் கேப்பை, கம்பு, கூழ் பதத்திற்கு மாறி விடும், அத்துடன் தண்ணீர் சேர்த்து கூழ் கரைசல் செய்து, மோருடன் சேர்த்து (உப்பு உங்களின் தேவைக்கேற்ப) பருகலாம். என்கிற குறிப்பை வழங்கினார்.. கடை ஓலைக்கூரையால் முடையப்பட்டிருந்தது.. வெயில் மறைக்க..  சுற்றிலும் தென்னை மர தோப்பின் நிழல்.... குடித்த கூழின் சுவை சொல்லி மாளாது.. நமது கிராமப்புற மக்களின் அமுத பானம் அல்லவா...!

கூழ் குடித்த புது தெம்பில்
              நமது ஊர்ப் புறங்களில்,  ஏர் பூட்டி வயல் உழுது , கரிசல்  காடுகளில்  கேணி வெட்டி, பச்சை பயிர்களுக்கு கமலையில் நீர் இறைத்து, பாடுபடும் விவசாய தோழர்களுக்கும், கடும் வெயிலில் பாரம் சுமந்து, கற்பாறை உடைத்து, கான்கிரிட் கலவை கொண்டு வீடு கட்டும் தொழிலாளிகளுக்கும்,   உடல் வலுவிற்கும், உழைப்பினால் ஏற்பட்ட சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரவும், பசியை போக்கவும், அரிசியோடு  சிறுதானியங்கள் துணை புரிந்தன..கடும் வறட்சியிலும் விளைச்சல் கொடுக்கும் சிறு தானிய வகைகளான.. கூரவு (கூவரகு ) என்ற கேழ்வரகு, கம்பம்புல் (கம்பு), சோளம், குதிரைவாலி, தினையரிசி, சாமை, வரகு, காணம்  போன்றவை நம் வாழ்வில்  நீங்கா இடம் பெற்றிருந்தன. கம்மங்கஞ்சி, சோளக்காடி, சோளச்சோறு, காணத்துவயல், கேப்பைக்களி, உளுந்தங்களி, வெந்தயக்காடி, இந்த உணவு வகைகளை  நம் நாக்கு என்றும் மறவாது, மரண வீடுகளில் துட்டி(அடக்கம்) முடிந்த, மறுநாள், காலையில், காணத்துவயலோடு, சுடுகஞ்சி குடித்தது நினைவில் வருகிறது.  நமது நாகரீக உணவு முறையால் இவை மாய்ந்து போயின.. தற்போது இணைய காலத்தில் இத்தானியங்கள் மீண்டு, மக்களிடையே பயன்பாட்டுக்கு வர துவங்கியுள்ளன.தினம் தினம் இயற்கை உணவு நன்மை தரக்கூடியதென்றும், உடல் சோர்வு நீக்கும் என்றும் வாட்ஸப், முகநூல் செய்திகளை பார்த்து, வீட்டுக்கு சோளம், கூரவு வாங்கி கொண்டு போய், அதை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய அனுபவம் நம்மில் பல பேருக்கு உண்டு.. இருந்த போதும் கேப்பை மாவில்  கூழ் காய்க்க இயலாமல் போனால் கொழுக்கட்டை, புட்டு, செய்யலாம், இல்லையெனில் மாவோடு சர்க்கரை, பழம்  சேர்த்து பலகாரம் செய்து, நம் இல்லத்து மழலைகளோடு   சாப்பிடலாமே...! 

* சில சிறு தானிய உணவுகள் செய்முறை பற்றி.. உணவு எழுத்தாளர்.            திரு. போப்பு அவர்களின் தொடர் கட்டுரை.. லிங்க் .  கீழே ...
Millet Foods Preparation- Tamil Hindu  

              ஊருக்கு விடை கொடுக்கும் முன்  மயிலாடும் பாறை பாடல்கள்  *(T B. கஜேந்திரன் இயக்கத்தில், மேஸ்ட்ரோ இளையராஜா இசையில்,   பன்முக ஆளுமை  கங்கை அமரனின் வரிகள், பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம், என்ற பாடலும், இப்போது  நகைச்சுவையில் கலக்கி வரும் தம்பி ராமையா அவர்களின் இயக்கத்தில் தேனிசைத்  தென்றல் தேவா வின் இசையில், வெளியான மனுநீதி படத்தில் இடம்பெற்ற  மயிலாடும் பாறை... பக்கத்துல ஓட.. (பாடகி : சத்யா) என்ற பாடலும் இவ்வூரின் பெருமையை பறைசாற்றின )

மறக்க இயலா ருசி 
                   மயிலாடும் பாறை கடந்து, துரைசாமியாபுரம் என்ற ஊரை அடைந்தோம், அங்கிருந்து இடப்பக்கம் பிரியும் கிளைச்சாலையின் வழியே பயணம் தொடர்ந்தது, பச்சை பசேலென்ற நெல் வயல்கள், வாழைத்தோட்டங்கள் அதிலும் குறிப்பாக செந்துளுவன் என்னும் செவ்வாழை, றொபேஸ்டா என்ற பெயர் கொண்ட பச்சைப்பழம், ரஸ்தாளி பழக்குலைகளை காண முடிந்தது, காய்கறி தோட்டங்களும், கரும்பு வயல்களும் கண்களுக்கு விருந்தாகின..... பகல் நேர வெயிலை வாங்கிக்கொண்டு, பாலஸ் விரைந்து சென்றது, ஒவ்வொரு ஊரின் பெயரை பார்த்தவாறே... இறுதியில் சுருளிப்பட்டி என்ற ஊரை அடைந்தோம், அங்கிருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் விரைந்தோம், சாலையின் இரு பக்கமும் திராட்சை (முந்திரி) தோட்டங்கள் நிறைந்திருந்தன.. இச்சாலை பார்க்க மிகவும் ரம்மியமானது மேற்கு தொடர்ச்சி மலையின்  அழகையும், திராட்சை கொடிகள் படர்ந்த தோட்டங்கள் வழியே பயணிப்பது ஒரு புது அனுபவம், வழியில் அங்கங்கே திராட்சை பழங்கள்  விலைக்கு கிடைக்கின்றன.. சாலை முழுதும் திராட்சை  மணமாக திகழ்கிறது ...  

ஒரு போஸ் 

 கொடியில் கொத்தாய் காய்த்து கிடைக்கும் திராட்சை கனி.  A Bunch of Grapes in a  Farm
                 
                    கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு சூப்பர் குளியல் போடலாம் என்ற கற்பனையில் சுருளி அருவி செல்லும் சாலையில் பயணித்தோம், கூட்டம் அதிகமாவே இருந்தது, இந்த அருவி தமிழ்நாடு வனத்துறையின் கண்காணிப்பில் செயல்படுகிறது, இளநீர், மாங்காய், சோளப்பொரி கடைகளை கடந்து, நுழைவு கட்டணம் செலுத்தி அருவி செல்லும் சாலையில் நடந்தோம், வழியெங்கும் நீள் நெடிய தேக்கு, அயினி, மற்றும் பெயரறியா மரங்களின் கூட்டம், மரங்களின் மேல் நம் முன்னோர்களின் (குரங்குகள்) நோட்டம், கொஞ்சம் கவனமாகவே செல்ல வேண்டும், 15 நிமிட ஆரண்ய பயணத்தில் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது சுருளி அருவி.  தண்ணீர் விழுவதை விசாரித்து செல்வது நல்லது, எங்கள் நேரம் தண்ணீர் பற்றாக்குறை, அதிக அளவில் மக்கள் வெள்ளம், அவர்களை நனைக்க முடியாத அருவி வெள்ளம், பார்த்ததே போதும் என்ற மகிழ்ச்சியில் நீராடாமலே திரும்பினோம்..   தேனி, மதுரை, மாவட்ட மக்களுக்கும்  கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களின்  மனம் கவர் அருவியாய் இது திகழ்கிறது, 

ஒரு வண்  மரத்து  வேரின் அருகே -Rider Elango Stay in a Big Tree Root in Suruli Falls Park 

 எங்களுக்கும் தண்ணீர் தாகம் உண்டு நண்பா-A Monkey is Waiting for Water Clicked in Suruli Falls Entrance

சுருளி அருவியை தேடி....

தாயிடம் பால் குடிக்கும் குட்டி குரங்கு (ஓர்  அரிதான காட்சி ) Infant with Mother Monkey in a Tree Cliked at Suruli Falls

             சுருளி அருவி பார்த்து முடித்ததும் எங்கள் குமுளி பயணம் தொடர்ந்தது... கம்பம்-கூடலூர்-லோயர் கேம்ப்- (தேசிய நெடுஞ்சாலை 183)  வழிகளில் வேகமாய்.. வழியில் காணும் இடத்தில சுட்டு தள்ளிய சில ஒளிப்படங்கள்...
 அறுவடை செய்த நெல் வயல்களின் அழகு. Beauty of Harvested Paddy Fields in Theni District Tamil Nadu

நெல் வயல்கள் காய்ச்சலுக்கு கிடக்கின்றன. கிளிக்கிய இடம் தேனி மாவட்டம் கம்பம் அருகே..Beauty of Harvested Paddy Fields in Theni District Tamil Nadu

Beauty of Some Coconut Trees, Theni District Tamil Nadu

                   இன்னும் சில கிலோமீட்டர்களில்  சமவெளி பாதை முடிந்து, மலை ஏற்ற பாதை செல்ல போகிறோம் என்பது தெரிந்தது...ஏற்கனவே மயிலாடும் பாறை மலைப்  பாதை எறியதில் குமுளி வழி மலைப்பாதை சிரமம் இல்லாது இருந்தது... எதிர் வரும் வண்டி குறித்த தெளிவு நமக்கு கொஞ்சம் இருக்க வேண்டும், கேரளா, தமிழ்நாடு பேருந்துகள் வளைவுகளை சுலபமாய் கடந்தன.. 2மணி வெயிலிலும்  ஜில் லென்ற குளிர் காற்று தேகத்தை தீண்டியது, முல்லை பெரியார், குமுளி எவ்வாறு  இருக்கும் கற்பனையோடு, பாலஸும் பயணித்தது.. முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து நீர் வழி மின்சாரம் பெறும்  திட்டத்திற்கென்று மலையில் போடப்பட்டுள்ள ராட்சத குழாய்களை பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது.. மனிதனின் சக்தியையும், அதற்கென உழைத்த உழைப்பாளர்களிள் திறனும், செயல் திட்டம் வகுத்த பொறியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எம் சிரம் தாழ்த்த நன்றிகள்..

குமுளி செல்லும் மலைப் பாதை மீது, காண்பது தமிழ்நாடு மாநில பகுதி . A Hill View in Kumuly Way


இராட்சத தண்ணீர் குழாய்கள்.  Beauty of Gigantic Pipes in Kumuly Highway 

A View  of Gigantic Pipes in Kumuly Highway

இந்த சாலை யோரம் 

வாகனங்கள் வராத வேளையில். On Kumily Hill Way
                மலை ஏறும் பயணம் மிகுந்த சுவாரஸ்யம் தந்தது, மூங்கில் மரங்களில் கேட்கும் க்ரீம் ..க்ரீம் ஓசை, கிக்கிளி எழுப்பும் பறவைகளின் சத்தமும், மகிழ்ச்சி அளித்தன.. குமுளி மலைப்  பாதையில், வெண்ணுரை அள்ளி வழங்கி, ஆர்ப்பரித்த சிற்றோடை அருவியின் அழகில் மயங்கி சிறிது நேரம்  நின்றோம், மயக்கிய அருவியை கேமராவுக்குள் அடக்கினோம், அதன் எதிரில் நெடிய மரங்களில் பெரிய தேன் கூடுகள் தொங்கி கொண்டிருந்த காட்சி வியப்பில் ஆழ்த்தியது, அதன் ஒளிப்படங்கள்  சில.... 

மரத்தில் மையம் கொண்டுள்ள பெரிய தேன் கூடுகள்.  Huge  Honey Combs  in a Tree, clicked in Kumily Hill way

 வனத்தின் வழியே பாயும் ஒரு பேரோடை . a Unknown Creek in Kumuly Hill Way

  வெண்ணுரை வழங்கும் வெள்ளச் சாட்டம் . Beauty of a Unknown Creek in Kumuly Hill Way

தமிழக அரசுப் பேருந்து.  a Tamil Nadu State Bus is Going to Madurai

 மதயானைக் கூட்டம் படத்தில் பார்த்த இடம்.. Infront of gigantic Pipes

வானம் பார்த்த போது 
               குமுளி மலைப்பாதை மிக அழகாக உள்ளது, மழைக்காலங்களில் இன்னும் அதிக அழகுடன் திகழ்கிறது, வளைவு கொண்ட பாதையில் கார், மற்றும் சுற்றுலா வாகனங்களில் பயணிப்போர் இயற்கையின் எழிலை கண்டு மகிழ்ந்து,  மலைக் காற்றையும் மனதார நேசித்து செல்வது நம் பயணத்தை ரசிக்க வைக்கின்றன..வழியோரம் சாயாக்கடைகள், சிற்றுண்டி சாலைகளும் இருக்கின்றன.. இம்மலைப்பாதையில் பதிக்கப்பட்டிருக்கும் ராட்சத குழாய்களை நாம் ஒரு சமீபத்திய  படத்தில் பார்த்திருப்போம்.. இயக்குனர் பாலு மகேந்திராவில் பட்டறையில் உருவான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், இளம் நடிகர் கதிரின் இயல்பான நடிப்பில் வெளியான மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் இடம்பெற்ற எங்க போற மகனே.. நீ எங்க போற மகனே* ... பாடலில் இந்த மலைப்பாதையை அழகாக காட்சிப்படுத்தி இருந்தார்  ஒளிப்பதிவு கலைஞர் ராகுல் தர்மன் . அதை காணுங்கள் இணைப்பு கீழே ...


* எங்க போற மகனே.. நீ எங்க போற மகனே- பாடல் 
பாடியவர்: தஞ்சை செல்வி
பாடல் உருவாக்கம்: ஏகாதசி 
பாடல் இசை : என் ஆர் ரகுநந்தன் 
( தேசிய விருது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன், கிருஷ்ணவேணி பஞ்சாலை , மஞ்சப்பை, புலிவால், சிவப்பு, மாப்ள சிங்கம்  போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்த இளம் இசை அமைப்பாளர் என் ஆர் ரகுநந்தனின் தந்தை கடந்த வாரம்  மரணம் எய்தினார் .. அவரை பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கும், சொந்தங்களுக்கும் ..  எங்கள் வலைப்பூ சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் )

பாடலை காண....

 
                   

             பயணத்தில் ஏற்பட்ட களைப்பு போக்க, மதியம் சாப்பிட இருக்கையில் மணி 3 ஆகிவிட்டதால், சோறு ஒரு ஹோட்டலிலும் இல்லை எனவே, கேரளா ஸ்டைல் முட்ட கறியும், இடியாப்பமும் தின்று பசியாற்றினோம்.. கேரளாவில் சிறு ஹோட்டல்களிலும் சாப்பாடு மிக ருசியாக உள்ளது, விலையும் கட்டுப்படியாகும் விலை தான்.. இடியப்பம் ஒன்றுக்கு 5 ரூபாய் , முட்டை கறி 15 ரூபாய்.. அப்புறம் என்ன ஆளுக்கொரு  5 இடியாப்பமும்,  கேரளா கட்டஞ்சாயாவும்  குடித்து குமுளி நகரை அடைந்தோம். 
(பயணம் தொடரும்)...
  மத்திய உணவு, முட்டைக்கறியுடன் கூடிய  இடியாப்பம். Our Mid-day Meal Idiyappam with Egg Curry
      கழிந்த 2016ஆம் வருடம் சிலருக்கு  மகிழ்ச்சியாகவும், பலருக்கு எரிச்சலாகவும் (பணம் மாற்ற வரிசையில் நின்றது), சில மாதங்கள் கசப்பாகவும் கழிந்திருக்கும், சில நினைவுகளை, மனம் வருத்தும் கவலைகளை சவுட்டி தள்ளுவோம்.. புத்தாண்டில் புதிய சிந்தனைகளை வரவேற்போம்.. புத்தாண்டு அனைவருக்கும் இனிய நாட்களை தரவேண்டும் என்று அனைவர்க்கும் வாழ்த்துக்களோடு..

என்றும்
இளங்கோ கண்ணன்.


புத்தாண்டில் சந்திப்போம்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
Wish you a Happy New Year- 2017

Friday 23 December 2016

சுருளி அருவி - தேக்கடி- குமுளி - மலையோரத்து பயணம்-1. ( A Ride to Suruli Falls- Thekkady- Kumily Hill Ride)

சுருளி அருவி - தேக்கடி- குமுளி - மலையோரத்து பயணம்.( A Ride to Suruli Falls- Thekkady- Kumily Hill Ride) Part-1

  • மயிலாடும் பாறை வழியே ஓர் உற்சாக பயணம் (a Yathra Via Mayiladum Paarai)

           தமிழகத்தின் மலைவாழிடங்களான, ஊட்டி என்கிற உதகமண்டலம், கொடைக்கானல் ஊர்களை  பள்ளி, கல்லூரி பருவ  சுற்றுலாவில் கண்டு மகிழ்வுற்றதால், கேரளத்தின் மலைவாழிடமான தேக்கடி செல்லும் வழியில் நடந்த நிகழ்வுகள், ஒளிப்படங்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன... 

           தேக்கடி செல்லும் இடத்தை கூகிள் மேப்பில் தேடி எடுத்ததில், மதுரை-தேனி-கம்பம்-வழியாக குமுளி செல்லும் முக்கிய சாலை. சுவாரசியம் தரும் பாதைகளை தேடுவதே எம் விருப்பம்.. அவ்வகையில்.. கூகிள் மேப்பில் புதிய வழித்தடத்தில் பாதையை கண்டுபிடித்து செல்லும் வழியை தீர்மானித்தோம்...

        விருதுநகர்-திருமங்கலம் நாற்கர சாலையில் கள்ளிக்குடி என்ற ஊரில் இருந்து இடப்பக்கம் செல்லும் சாலையில் எங்கள் பைக் (பாலஸ்-Phalus) பயணித்தது, பனி விலகாத காலைப்பொழுது, ஊர்ப்புற மக்கள் விழித்து தெருக்களில் நடமாட துவங்கி விட்டனர், வீடுகளின் முற்றத்தில் சாணி தெளித்து, கோலமிடும் அன்னையர், வேப்பங்குச்சி ஒடித்து பல்விளக்கும் பெரியவர்கள், காலைக்கடன் முடிக்க ஆற்றங்கரை நோக்கி நடக்கும் சிறுவர்கள், இரவில் அசைபோட்டு, காலை பசி போக்க தாய்ப்பசுவிடம் பால் குடிக்க செல்லும் இளம்கன்று, வைகறை மேய்ச்சலுக்கு தயாராகும் செம்மறிக் கிடைகள், விளிக்கும்  "அம்மா" என்ற அழைப்பை கேட்டவாறே.. கிராம சாலையின் நறுமணத்தை வாங்கி கொண்டே சென்று கொண்டிருந்தோம், வழிகளில்  சோளக்கொல்லை, நெல் வயல்கள், என்று இயற்கையின் எழில் கோலம், ஒளிப்படமெடுத்து பத்திரப்படுத்தினோம். 


பொன் காலை வேளை (A Golden Morning )

விவசாயம் செய்யாத வயல் காட்டில் Rider இளங்கோ 

        கள்ளிக்குடி-T .கல்லுப்பட்டி -பேரையூர் வழியே பாலஸ் கூட்டிச்சென்றது.. பேரையூர் நிறுத்தத்தில் காலை தேநீர், முடித்து, வண்டப்புலி*  செல்லும் சாலையை  நோக்கி சென்றோம், நமது தமிழகத்தின் ஊர்ப்புறங்கள் அழகாக இருந்தன. நிழலுக்கும், காற்றை சலவை செய்யவதற்கும் வேப்ப மரங்கள், பஞ்சாயத்துகள், ஊர் பெரியவர்கள் அமர்ந்து பேச அரசமர, வேப்பமர மந்தைகள்..நெல் வயல்களுக்கிடையே பூத்த தெங்குகள், பம்புசெட்டில் இருந்து ஓடை வழியே வயலுக்கு பாயும் தண்ணீர், அதில் ஆட்டம்போடும் சிறுவர், சிறுமியர்.. வெள்ளைக்குதிரையில் வேட்டைக்கு சென்று ஊர் காக்கும் அய்யனார்  என.., என்றும் மறக்க இயலாத ஒரு வழிப்பயணம்..
  
* (பேரையூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்.  பேரையூர்- உசிலம்பட்டி முக்கிய சாலையில் மங்கலரேவு என்னும் ஊரை அடுத்து  இடப்பக்கம் பிரியும் கிளைச்சாலை வழியே செல்கையில் வண்டப்புலியை அடையலாம்)


காலை பொழுதில் நீர் நிறை நெல் வயல்கள் (Paddy fields with Coconut Trees) 

ஒரு காலை நேர கிராமத்து காட்சி -கிளிக்கிய இடம் வண்டப்புலி (A Rural Side Morning) 

ஒரு கிராமத்து காலை (a Cow infront of a hut) 



ஊர்காக்கும் அய்யனார் முன்னே ( Village God Ayyanar Statue)

காற்றை சலவை செய்யும் பெரு அரசமரங்கள் ( A Banyan Tree) 
தெங்கு மரக்கூட்டங்களுடன் நெல்வயல்.. தூரத்தில் தெரிவது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் 


            வண்டப்புலியை அடுத்து  T .கிருஷ்ணாபுரம், அதனை தொடர்ந்து,  மள்ளப்புரம்  என்ற ஊர் வருகிறது, அவ்வூரின் வழியே  செல்ல.. செல்ல  வரவேற்கிறது ஒரு சுவாரசியம், த்ரில் நிறைந்த மலைப்பாதை... 
      நாங்கள் செல்வது மலைப்பாதை (மயிலாடும் பாறை செல்லும் வழி ) என்பது எமக்கு தெரியவில்லை, ஏனெனில் கூகிள் மேப்பில் தேடிய போது மள்ளப் புரம் முதல் மயிலாடும் பாறை வரையிலான சாலை  சமவெளி பாதை என்றே காட்டியது, (ஒருவேளை கூகிள் சாட்டிலைட் படத்தை பார்த்தால் தெளிவு கிட்டியிருக்கும்) சமவெளி என்று நினைத்து  மலைப்பாதை ஏறுவது சற்றே எதிர்பாராத, திருப்பம் நிறைந்த பயணம், இவ்வாய்ப்பை எமக்கு அளித்தது கூகிள் ...தேங்க்ஸ் டு கூகிள் மேப்.
 
          மலை பாதை துவங்கும் வழியில் தமிழக வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது, டூ வீலரில் செல்பவர்களை சோதனை செய்வதில்லை, கார், வேன், வாகனங்களில் செல்பவர்களின், வண்டி எண் பதிவு செய்துவிட்டு, அனுமதி வழங்கப்படுகிறது, இம்மலையின்  சாலைகள் சில இடங்கள் வரை நன்றாக உள்ளன.. சில இடங்கள் தார் பெயர்ந்து, குண்டும்  குழியும்  நிறைந்துள்ளது, மலை எங்கும் காட்டுக்கொடிகள், செடிகள்,  மஞ்சள் நிற பூ பூத்த ஆவாரை செடிகள், மழை ஏதுமின்றி காய்ந்து கிடந்த சுக்குநாறி, மலைப்புல், கவிப்பேரரசு. வைரமுத்து அவர்களின் அண்மையில் வெளியான  பாடல் வரிகளில் குறிப்பிட்ட , மாசு தூசு ஏதும் சேராத மஞ்சள் பூ பூத்த கருவேல மரங்கள்... வளைவு கொண்ட மலை மீது செல்கையில் எங்கள் பாலசுக்கும் பயணம் புது வேகம் கொடுத்திருந்தது (இனி  அது 200 கிலோமீட்டர் தூரம் மலை மேலே பயணிக்க வேண்டுமென்பது அது அறியாதது )  


மலை மீது நின்று இயற்கையை ரசிக்கும் பாலஸ் & ryder இளங்கோ 

ஒரு மலைக்காட்சி (A Hill View)

             மயிலாடும் பாறை செல்வதற்குள், அந்த பெயர் தெரியா  மலை மீது பயணம் செய்வது, மனதிற்கு உற்சாகம் அளித்தது, வெயிலின் சூடு தெரியாதவாறு மலை மீது மருந்து காற்று வீசியது, மேலே நின்று ஒளிப்படம் எடுப்பதும், மலை உச்சி காட்சி காண்பதும்.. கண்களுக்கு விருந்தாய் திகழ்ந்தது, மழை பெய்யும் நாட்களில் சில சிற்றோடைகளை காணலாம், நாட்டு உடை மரங்கள். சரளை கற்கள், பிரமிக்க வைக்கும் கருங்கற் பாறைகள், சிட்டுக்குருவிகள். தகைவிலான் குஞ்சுகள், நாகணவாய்ப்புள் என்னும் பெயர் கொண்ட மைனாக்கள், ஆந்தைகள், காக்கைகள் இவற்றிக்கு உணவு அளிக்கவும்,  ஒரு சீரிய வன புகலிடமாய்  திகழ்கிறது இம்மலை, உங்கள் நேரத்திற்கு உங்கள் கண்களில் காணும் பறவைகளை கண்டு மகிழுங்கள், ஒளிப்படம் எடுக்க மறக்காதீங்க .... 

இயற்கையின் எழில் (Nature Beauty from Mayiladum Parai)

நீராவி போக்கை கட்டுப்படுத்தும் கருவேல முட்கள் 


மலை மேலே நின்று கிளிக் செய்தது (A Clik Top of the Hill)

மறக்க இயலா மலை வழி (unforgettable Hill Road) 
     
         மலை பயணம் முடிந்து, தரை சாலையில் பயணிக்கையில் வயல் தோட்டங்கள், இங்கு பெருமளவில் காய்கறி பயிர்கள், விவசாயம் நடைபெறுகிறது, அவற்றில், அதிகமானவை தக்காளிப்பழம், சின்ன உள்ளி என்னும் சிறிய வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) கத்தரிக்காய், வெண்டை, வெடித்து சிரிக்கும் பருத்திச்செடிகள்.  சில வயல்களில் கிரேந்தி பூக்கள், கோழிக்கொண்டை பூக்கள் பூத்து சிரித்தன, தென்னைமர தோப்புகள், அதன் வேலியாய் இலவம் பஞ்சு மரங்கள் அதிக அளவில் நின்றிருந்தன, மரத்தில் மீதுள்ள இலவம் காய்களை பறித்து காயப் போட்டு சாக்கில் அடைத்து, இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, தயார் செய்யும் மில்களுக்கு வண்டிகளில் ஏற்றும் பணியும் நடந்து கொண்டே இருந்தது, இக்காட்சிகளும் மனதை ரம்மியமாக்கின......

         முத்தலாம் பாறை  என்ற ஊரை அடுத்து இடப்பக்கம் செல்லும் கிளைச்சாலையில் மாளிகை பாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது, அங்கே இடி முழங்குதே ... கருப்பசாமி தங்க கலசம் மின்னுதே- பாடல் காதில் ஒலிக்குதா ...! மண்மணக்கும் பாடகர் தேக்கம்பட்டி சுந்தர் ராஜன் அவர்களின்  இறவாப் பாடல்.  இந்த பாடல் கருப்பசாமிக்காகவே  படையல் செய்யப்பட்டது. எங்கள் பயணத்தில் நாங்கள் தவற விட்ட இடம் இக்கோயில்.  

காய்கறி பயிர் தோட்டத்தில் பணி செய்யும் அன்னையர் (Farmers worked in Vegetable Farm) 

           இந்த ஆண்டு (2016) தமிழகத்தில் பொழிந்த மழையின் அளவு குறைவாக இருந்தமையால், பச்சைப்பாடு மிக மிக  குறைவே, தமிழக நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட பகுதியிலும், மழை இன்றி பயிர் வாடியதால் தன்னுயிர் மாய்க்கும்  விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நம் மனதை அறுக்கின்றன.. வாரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்வது, நாம் அன்றாட செய்தி தாள்களிலும், காணொலி செய்தியிலும் காண்கிறோம், இந்நிகழ்வுகள் விவசாய வளமிக்க நம் நாட்டிற்கு ஆரோக்கியமான செய்தி அல்ல.. இவற்றிக்கான தீர்வுகள் எடுக்கும் முயற்சியில் அரசும், பொது மக்கள் அனைவரும் கருத்தொருமித்து நல் வழியை தேர்ந்தெடுத்து, விவசாயத்தையும், அதை உயிர் மூச்சாய் கருதும் விவசாய தோழனையும் காக்க  வேண்டும் என்பது எம் பெரு விருப்பம்..  


(பயணம் தொடரும்)....

****** அனைத்து உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் (நத்தார்)  தின நல் வாழ்த்துக்கள் *******

****** Wish you a Happy Christmas **********


நேசங்களுடன்
இளங்கோ கண்ணன்.








Monday 19 December 2016

வார்தா புயல்- சென்னை நகர சோகம் (Cyclone Vardha- A Devastation of Chennai)

வார்தா புயல்- சென்னை நகர சோகம்  (Cyclone Vardha- A Devastation of Chennai)

               டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அஞ்சல் அலுவல் தேர்வு எழுத சென்னை மாநகர் சென்றபோது நடந்த நிகழ்வுகள், சென்னை நகர மக்களின் சோகத்தில் பங்கு என இந்த பதிவு இடம்பெறுகிறது 

           கார்த்திகை கனமழை, மார்கழி இளங்குளிர் என்று கழிய வேண்டிய டிசம்பர் மாதம்,  அடுத்தடுத்த துயரங்களால்  துவண்டு போனது  நம்  தமிழகம் .
  
       ஒன்று, பிற மாநிலங்கள் வியக்கும் ஆளுமை,  நமது பெருமை மிகு முதல்வர் அம்மா. ஜெயலலிதா அவர்களின் இறப்பு. அந்த அதிர்ச்சி, சோகம் தீரும் முன்னே, அடுத்த வாரத்திலேயே சென்னை மக்களை "கொடுங்காற்று வார்தா" (Cyclone Vardha), புரட்டிப்போட்டது, ஆக்ஸிஜன் வழங்கும் அருமரங்களின்  ஆணிவேரை அறுத்துப்போட்டது, பல ஏழை மக்களின் வீடுகளின் கூரைகளை பிய்த்து எறிந்தது, ஆஸ்பெஸ்டா ஷீட்டுகளை அடித்து நொறுக்கியது,

            உயிர்ச்சேதம் குறைவென்றாலும், மக்கள் அடைந்த இன்னல் சொல்லி மாளாது,  தடைபட்ட மின்சாரம் குடிநீர் வழங்கும் மின் மோட்டார்களை மௌனமாக்கியது, வெளிச்சத்தின் நகரை இருட்டாக்கியது, மின் சுழல் விசிறி இன்றி உறக்கம் வராமல் அழுதன பல குழந்தைகள், புழுக்கம் இல்லாவிட்டாலும் சின்னலென்ற மென்காற்று அவ்வப்போது வீசி பெரியவர்களின் எரிச்சலை சற்று தணித்தது , கைபேசிகள் செயல் இழந்தன, ஆண்ட்ராய்டு, ஆப்பிள், (அதிவேக பேட்டரி பவர் என்று விளம்பரம்  அள்ளி வீசிய பெரு நிறுவங்களின்)  ஸ்மார்ட், பியூச்சர்,  போன்கள் கடைசி மூச்சு வரை போராடி "கோமா" நிலைக்கு சென்றன, சென்னை நகர வலைப்பின்னல் (Web, Internet ) சேவைகள்,  முடங்கின, தகவல் தொடர்பு அறவே துண்டிக்கப்பட்டது, சாலைகள் புயல் தகர்த்த வன்மரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன, குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்  (கழிந்த வருட மழைவெள்ள நிலையோடு ஒப்பிடுகையில் குறைவே ) சிறு துன்பம் ஏற்றனர். என்று துயர் தொடு வானமாய் நீளும்..

Cyclone Vardah an Image 

        டிசம்பர் 11ஆம் தேதி (ஞாயிறு) தேர்வு முடிந்ததும்., ஒரு நாள் சென்னையில் தங்கி விட்டு,  அடுத்த நாள் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தோம், அன்றைய தினமே எங்கள் சுமன் அண்ணன்* .. டே.. நாளைக்கு ஒரு பெரிய புயல்  இங்க (சென்னைல) வீச போவுது அதனால டிக்கெட்டை கேன்சல் பண்ணுங்க.. புயல் முடிஞ்சு புதன்கிழமை போலாம் னு தொலை நோக்கு பார்வையோடு  சொன்னார்.. 

     நாங்க கேப்போமா? அட போங்கண்ணே இப்டி தான் "நாடா" (Cyclone Nada) னு ஒரு புயல் அப்டி இப்டி வீசும் மழையா கொட்டும் னு சொன்னீங்க .. என்ன ஆச்சு? சவுடால் உடாதீங்க அப்டினு அந்த அண்ணன் பேச்சை நக்கல் அடிச்சோம், விளைவு.. நமக்கே தெரிஞ்சதே டிசம்பர் 12ஆம் தேதி..   

(*சுமன் அண்ணன் ரயில்வேல வேலை பார்த்தாலும், வளிமண்டலவியல்  துறையில் தான் விருப்பம்.. என்னது வளி-மண்டல- வியலா ...? ஒண்ணுமே புரியலையா.. அதாங்க Meteorological  Department விளங்குற மாதிரினா நம்ம "வானிலை ரமணன்" போல புயல், மழை, வெப்பச்சலனம்,     எல் நினோ இவைகளை பற்றி பேசும் பெரு விருப்பம் உள்ளவர், முக நூலில் tamilnadu weatherman ரசிகர்  )

           அண்ணனின் முன்னெச்சரிக்கை கேட்டதுமே ஞாயிறு இரவே செல்போன் முழுதும் பேட்டரி சார்ஜ் செய்து விட்டோம். அண்ணன் காலைல வேலைக்கு போகும் போது சர மழை மெதுவாக பெய்து கொண்டிருந்தது, அப்பவும் அவங்க சொல்லிட்டு தான் போனாங்க..  வரும் போது ஒரு பேரழிவு இருக்கு பாத்துக்கோங்க னு சவால் விட்டுட்டு போனாங்க.. சரி பாப்போம் என்று காலை பலகாரம் தின்று விட்டு, வெளியே பார்க்கையில் மழை வேகமாக பெய்து கொண்டிருந்தது, வேகம் கூட ..கூட.. காற்றின் சத்தம் அதிகமானது, அந்நேரம் (9 மணி அளவில் ) கரண்டும் கட் ஆனது, அவ்வப்போது செல்போன் இன்டர்நெட்டில் நேரலை மழை, புயல் அறிவிப்பை பார்த்தபடி இருந்தோம், புயலின் கண், மேலடுக்கு, புயல் வீசும் வேகம், கரையை கடக்கும் நேரம் என அறிவிப்பு நீண்டு கொண்டே போனது,எங்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது.
          
               மத்தியான சாப்பாட்டை உண்டுவிட்டு, வீட்டு தட்டில் (மாடியில்) நின்று பார்க்கையில் மழை வெறிச்சது போலிருந்தது. வானில் கரு மேகங்கள் அதிவேகமாய் ஒடிக்கடந்தன... கலிங்கத்துப்பரணியில் செயம்கொண்டார் பாடிய பாடல் மனதுள் வந்து போனது .. கோடை காலத்தில் வெயிலின் வெக்கை தாளாமல் கருமுகில் ஓடி கடந்ததை போல.. வார்த கொடுங்காற்றின் வேகம் எழிலியை (மழை தரும் மேகம்)140 கிமீ வேகத்தில் ஓட்டம் கொள்ள செய்தது..
        
               நங்கள் தங்கியிருந்த சிட்கோ நகர் பகுதியில் உள்ள மாடி வீடுகளில் உள்ள மேல் மாடத்தில் குடும்பத்துடன், குழந்தைகளும், புயல் காற்று  வேகமாக வீசும் போதில், ஊளைகளும், கூச்சல்களும், விசில் அடித்தும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்... வார்த என்னும் கொடுங்காற்றின் வேகம் எங்களை நிலைகுலைய செய்தது. எல்லாருடைய வாழ்விலும் மறக்க இயலாத சம்பவமாய் இப்புயல் ஆகிவிட்டது 

சிட்கோ நகர் பகுதியில் முக்கிய சாலையை மறித்து வேரோடு பெயர்ந்த மரம் ( A Tree Fallen in SITCO Nagar Chennai)

கொடுங்காற்றின் சுழலுக்கு பலியான மரம் ( Tree Fells down by Cyclone Vardah)

நிழல் தரும் நீண்ட தரு வீட்டின் மேல் 
            புயலானது கரை கடக்கும் நேரத்தில் நமது தமிழக அரசு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்து (யாரும் மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்) பல மக்களின் உயிர்களை காப்பாற்றியது, இல்லையென்றால் செல்பி வித் வார்த னு பேஸ் பூக் ல, வாட்ஸாப் ல, இன்ஸ்டாகிராம் ல.னு போட்டோ போட ஒரு குரூப் கிளம்பிடுவாங்கல...அவங்களையும், பாவப்பட்ட மக்களையும், குழந்தைகளையும், ஒரு அதிரடி அறிவிப்பால் எல்லாருக்கும் ஒரு பாதுகாப்பு கொடுத்தாங்க...

              மாலை 4 மணி அளவில் வேலைக்கு சென்ற எங்கள் அண்ணன் வீட்டிற்கு வந்தார்கள், எங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை, அப்பவே சொன்னேன் .. என்னடா சொன்னீங்க.. சவுடால்-னா..? இப்பவாவது நம்புறீங்களா...? னு கேட்டாங்க..! ஆனா அடுத்து தான் சென்னை நகர்-ல முக்கியமான ரோடுகள்-ல மரங்கள் எல்லாம் வேரோடு முறிஞ்சு கிடக்குன்னும்..ரோடு ஒரு காடு போல இருக்குனு சொன்னாங்க.. அப்பவே கிளம்பினோம்... அந்த நேரம் சாலையில் விழுந்த மரங்கள் தான் இதெல்லாம், அப்போதான் தெரிஞ்சது, வன் காற்று வர்தவின்  சூழல், வேகம், மரங்களை பெயர்த்தெடுத்து மக்களுக்கு பயம் காட்டியதன் திறன்... இப்புயலுக்கு தப்பிய மரங்கள் கொடுத்துவைத்தவை..."Survival of the Fittest" 

சாலை நடுவே நடக்க முடியாமல் வீழ்ந்து கிடக்கும் மரக்கூட்டங்கள் 

வீழ்ந்த மரத்தை அகற்றும் நல் உள்ளம் கொண்டோர்கள் 
             

        எங்கள் குடியிருப்பு பகுதியில் சாலை நடுவில் வீழ்ந்த சிறுமரங்களை ஊரில் உள்ள வாலிபர்கள், முதியோர், திறன் மிகுந்தோர், அரிவாள் கொண்டு கொப்புகளை ஆய்ந்து, சிறு கம்புகளை தறித்து மக்கள் நடமாடும் அளவிற்கு தூய்மை செய்து, யாரையும் எதிர்பார்க்காமல் வேலையை செய்து முடித்தனர்...

          புயலின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்காமல் வீழ்ந்தவை நம் நாட்டின் பாரம்பரியமிக்க மரங்கள் அல்ல, வெளி நாட்டின் அழகுக்கு வளர்க்கப்படும் மரங்கள் தான் என்று ஒரு சாரார் கூறுவது சரியென தோன்றியது, ஆம் வீழ்ந்தவை, ஆல், அரசு, பூவரசு, புங்கு, புளி, போன்ற மரங்கள் அல்ல பல பெயர் தெரியாத மரங்களே...
          
                        சென்னை வாழ் மக்களுக்கு கடந்த ஆண்டு கடும் மழை பொழிவை தந்து இயற்கை சோதித்தது, இந்த ஆண்டு கொடுங்காற்று வார்தாவை கொடுத்து வாழ்வை நொடித்து போட்டது, என்றும் மக்களின் துயரங்களில் பங்கு கொண்டு, நம் சொந்தங்களுக்கு உதவி செய்தும், ஆறுதல் கூறியும் வாழ்வை வாழ்ந்திருப்போம்......

இனி புயல் தகர்த்த மரங்கள் படங்கள்...

மரங்களை வெட்டி மற்றும் பொதுமக்கள் இடம் சிட்கோநகர் சென்னை 

சாலையில் வீழ்ந்த காட்டுப் பூவரசு  


வேரோடு பெயர்த்த வார்த கொடும் புயல் 


 "வார்த"-னா உருது மொழில சிவப்பு ரோஜா னு அர்த்தமாம், பாகிஸ்தான் நாட்டுக்காரங்க கொடுத்த பெயர், இதற்கு முன் வீசிய  "நாடா" புயல் ஓமன் நாட்டுக்காரங்க கொடுத்த பெயர். புயல் பெயர்கள் அறிய .....  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone_naming)

தொடர்ந்து காண வருபவை வாட்ஸப்பில் வந்த படங்கள் 







மேலும் படங்கள்
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article9423098.ece?ref=slideshow


நேசமுடன் 
இளங்கோ கண்ணன் 

ஒளிப்படங்கள் உதவி 
சுமன்.ம