Friday 27 January 2017

பெரியார் புலிகள் காப்பகம், தேக்கடி (கேரளா)- Periyar Tiger Reserve Park, Thekkady, Kerala

பெரியார் புலிகள் காப்பகம், தேக்கடி (கேரளா)
           குமுளி - தேக்கடி நகரில் அமைந்துள்ளது, பெரியார் புலிகள் காப்பகம். தேக்கடி சாலையில் செல்கையில் புலிகள் காப்பக நுழைவாயில் நம்மை வரவேற்கிறது, நுழைவு கட்டணம்  (ரூபாய்-60) செலுத்தியபின், அனுமதிக்கிறார்கள். இந்த வனப்பகுதி முழுவதும் 925 ச.கிமீ ஆகும், இது  கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நுழைவு வாயில் இருந்து ஏகதேசம் ஒரு மைல் தூரம், வழியெங்கும் வன் மரங்களின் காட்சி மற்றும் தணுப்பு, மனம் மயக்கும் குயில்களின் பாடல்,  உள்ளத்திற்கு பரவசம் தரும் பேரறியா  பறவைகளின் கொஞ்சு மொழிகள்,  என வழியெங்கும் ஒரு உற்சாகம் நமக்கு ஏற்படுகிறது




       
        பெரியார்   சூழியல் பூங்காவில் பலவகைப்பட்ட மரங்கள், பூ பூக்கும் செடிகள் கொடிகள் உள்ளன. மரங்களில் பெயர்கள் மூன்று வகையாக எழுதப்பட்டுள்ளன  மலையாளம், ஆங்கிலம் மற்றும் தாவரவியல் பெயர், அத்தோடு மட்டுமின்றி  அதன் மருத்துவ குணங்களும் குறிப்படப்பட்டுள்ளன. வீழ்ந்து கிடைக்கும் மரங்கள் நம்மை ஒளிப்படம் எடுக்க அழைக்கின்றன. அவ்வாறு   ஒளிப்படம் எடுக்கையில் கவனம் தேவை. ஏனெனில் உங்கள் உடலோடு ஒட்டி உதிரம் குடிப்பதற்கு  அதிக அளவில் அட்டைகள் இங்கு உள்ளன. Rider இளங்கோவின் பாதத்தில் ஏறிய அட்டையை கண்டிபிடிக்க 2 மணிநேரம் ஆனது. இந்த அட்டைகளை பயன்படுத்தி லீச் தெரபி செய்யப்படுவதாக எங்கோ படித்த செய்தி மனதில் ஓடியது. இவ்வகை அட்டைகள் சிறிய கரும் நூலிழை போன்று இருப்பதால் அடையாளம் கண்டுகொள்வது சற்றே கடினம், நம் உடலில் கடிப்பதும் தெரியாது, இரத்தம் உறிஞ்சுவதை  நம் தேகம் அறியாது, (அந்நியன் படத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறதா? யெஸ்.. கிருமி போஜனம்), எனவே நண்பர்களே கொஞ்சம் கவனம். உங்கள் குழந்தைகளை பத்திரமாய் பார்க்க வேண்டுமே அதற்காக..

     இங்கு செல்லும் பொது காலுறைகள் (shocks), ஷூ  அணிந்து செல்லலாம். மூக்குப்பொடி(கிடைத்தால்) வாங்கி வைத்து கொள்ளலாம். இல்லை என்றால் கெட்ட  ரத்தத்தை குடித்து அதுவும் (அட்டை) உயிர் வாழட்டுமே என்று கருதி, குருதி கொடையும் வழங்கலாம். உங்கள் முடிவு.  
  





        இப்புலிகள் காப்பகத்தின்  தனிச்சிறப்பு "போட்டிங் (Boating)" என்று சொல்லப்படும் படகு சவாரி, காலை 6-8 மணி, மாலை 3-5 மணி  சவாரி பயணிக்க வேண்டும். (டிக்கெட் முன்பதிவை நேரத்தே செய்து கொள்ளவேண்டும், அந்நேரத்தில் டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டம் அலை மோதும்).  இந்த சமயத்தில் தான் மான், மிளா, ஆனைக்  கூட்டங்கள், காட்டெருமை, புலி போன்ற வன ஜீவன்கள்  தண்ணீர் குடிக்க அணை பகுதிக்குள் வரும், அவற்றை கண்டு மகிழலாம் உங்கள் நேரத்திற்கு ஒன்றும் காணாமல் காட்டு மரங்களையும், இயற்கை அழகினையும்  கண்டு வரலாம், எந்நேரமும்  கணினி, செல்போன் , வாட்ஸப் , ஒரே வேலை, ஒரே இடம், அலைச்சல், டென்ஷன்   என்று பார்த்து பழகிய கண்களுக்கு ஒரு மாற்றாய் இந்த சவாரி அமையும்.

படகு சவாரி பயணத்தொகை மற்றும் விவரங்கள் தகவல் மையத்தில் விரிவாக வைக்கப்பட்டுளள்ன. மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக்குக.
Periyar Tiger Reserve-Website





       மழை பெய்து முடிந்த காலங்களில் (ஜூன், ஜூலை, மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் ) பெரியாறு அணையில் நீர் நிரம்பி வழிகிறது, இக்  காலங்களில்  நம் படகு சவாரி மேற்கொள்ளும்போது வன விலங்குகளை  காண்பதரிது, காட்டு விலங்குகளுக்கு தேவையான நீர் வனத்திற்குள் கிடைப்பதால் அவை, ஆறு தேடி வருவதில்லை. வறட்சி காலத்தில் தான் ஆற்றை நோக்கி வருகின்றன, எனவே தேக்கடி பயணத்தை சரியான திட்டமிடலோடு துவங்குதல் நலம்.



       பசுமை சூழல் , சுத்தமான காற்று, மனதிற்கு அமைதி என இப்பூங்கா திகழ்வதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர், பார்த்து ரசிக்க குரங்கு கூட்டங்கள், அதிலும் மனித முகத்தோற்றத்தில் காட்சியளிக்கும்,  நீலகிரி லாங்கூர் வகை குரங்குகளை சாதாரணமாக காண இயலும், நீளமான புசு புசு வால்  கொண்ட மலபார் அணில் மரத்திற்கு மரம் சாடுவது பார்க்க ரம்மியமானது, இது போல் பல அனுபவங்களை காணவே  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட அதிகளவில்  வருகின்றனர். அவர்கள் காட்டுக்குள் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, வன வாழ்வை அனுபவிக்க வருடா வருடம் வந்து செல்கின்றனர். (இதுபோல் பல பயண திட்டங்கள் உள்ளன உங்கள் செலவழிக்கும் திறன் பார்த்து நீங்கள் முடிவு செய்யலாம்).  பல ஒளிப்படங்களை சுட்டுத்தள்ளுகின்றனர்.
     
        ஆனா.. நம்ம ஆட்கள் எல்லாத்துலயும் கஞ்சத்தனம் பிடிக்கிறாங்க. நாங்கள் சந்தித்த  ஒரு குடும்பத்தில் ஒருவர் "ஏய். கேமெராவுல ஒரு போட்டோக்கு மேல எடுக்க வேணாம்பா.." என்று இறுகிய முகத்தோடு எங்களிடம் கூறியது ஒரு வியப்பை தந்தது, எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிற பெண்மணிகளுக்கு, பல வருஷமா ஒரே தெருவுல நடக்குற பெரியவங்களுக்கு , ஒரே பள்ளிக்கூடத்துல படிக்கிற நம்ம செல்ல குழந்தைகளுக்கு , ஒரே கடை, ஒரே வேலை பாக்ற குடும்ப உறுப்பினர்களுக்கு,  மனசுக்கு ஒரு புத்துணர்ச்சியும், உடலுக்கு ஒரு தெம்பும் தருவதற்காகவே நாம் ஒரு ஜாலி ட்ரிப் போவோம், அங்கேயும் இப்படி ஆயிரமாயிரம் காரணம் சொன்னா .. எப்படி அந்த டூர் இருக்கும் என்பதை நினைத்து பார்க்க ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது. அதனால மகிழ்ச்சியோடு போங்க.. பல போட்டோ எடுங்க.. குழந்தைகளுக்கு நிறைய சொல்லிகுடுங்க..ஒரு புது அனுபவம் வாங்கி வாங்க..!

பெரியார் புலிகள் பூங்காவில் நாங்கள் சுட்ட சில  ஒளிப்படங்கள்







     பூங்காவின் மய்ய பகுதியில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வன வாழ்க்கையின் சாரத்தை நமக்கு எடுத்துரைப்பது போன்று திகழ்கிறது. ஒரு கொடியில் பல வன விலங்குகள் சங்கிலி தொடர் போன்று பிணைந்திருப்பது இதன் சிறப்பு. நடு நாயகமாய் வீற்றிருக்கும் வன்புலி  பார்க்க பேராவல் தருகிறது. எல்லோருக்கும் ஒளிப்படம் கொடுக்கும் இடமாக அமைகிறது.
   
          இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் தங்கும் வசதிக்காக கேரளா அரசு வனத்துறை சார்பில் விடுதிகள் உள்ளன (குறைவான கட்டணம்) முன்பதிவு அவசியம். அத்தோடு மட்டுமின்றி தினசரி நாளிதழ் மற்றும் வாராந்தரி  படிக்க (தமிழில் தினத்தந்தி மட்டும், மற்றவை மலையாளம், ஆங்கிலம் ) அழகான ஒரு படிப்பகம், உடன் தொலைக்காட்சி, குடிநீர்  வசதியுடன்  இங்கு நுழைவு கட்டணம் இல்லை இலவச சேவை. மேலும் பயணிகளின் வசதிக்காக கேரளா உணவு விடுதி (கேரளா பக்ஷண சாலா) உள்ளது, இங்கு கேரளா பாரம்பரிய, புட்டு கடலை கறி, இட்லி, பத்திரி, தோசை, வடை வகைகள், மற்றும் சூடான தேக்கடி தேநீர், கிடைக்கிறது, டோக்கன் வாங்கி சாப்பிட செல்லலாம்
.




காலை நேரம் மட்டுமின்றி எந்நேரமும் ஒரு பசுமையான சூழலில் மனம் மகிழ நீங்கள் தேக்கடி புலிகள் பூங்காவை தேர்ந்தெடுத்து செல்லலாம்.  


பயணம் தொடரும்....

இளங்கோ கண்ணன்.

Monday 23 January 2017

தமிழனின் வீரம்- அடையாளம் ஜல்லிக்கட்டு -Support to Jallikattu

தமிழனின் வீரம்- அடையாளம் ஜல்லிக்கட்டு 
ஏறு தழுவலுக்கு கொட்டும் பனியிலும் , அடிக்கும் வெயிலிலும் போராடும் எம் தமிழ் சொந்தங்களுக்கு  என்றும் எம் ஆதரவு..
...தமிழ் வெல்லட்டும்...

Friday 13 January 2017

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் - Wish you a Happy Pongal


தமிழனின் ஜல்லிக்கட்டுக்கு தடை 
பருவம் பொய்த்த மழை 
உணவு வழங்கும் உழவனின்
தொடர் தற்கொலை 
இந்நிலை மாற வேண்டும்...
வாழ்வின் சோகம் மாய வேண்டும்..

என்று பொங்கலை வரவேற்போம் 
இனிய 
தைப்பொங்கல் திருநாள் 
தமிழர் திருநாள் 
உழவர் திருநாள் 
திருவள்ளுவர் தினம் 

வாழ்த்துக்கள்..


 

சுசீந்திரம் கோவில் தேரோட்டம்- நாஞ்சில் மக்களின் கொண்டாட்டம் (Suseenthiram Arulmigu Thanumalayan Temple Chariot (Ratha) Festival)



மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம்-Suchindram Chariot Festival

கன்னியாகுமரி மாவட்ட விழாக்களில் முக்கியத்துவம்  வாய்ந்தது, சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் தேரோட்டம் ஆகும். கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், குமரியின் வற்றாத ஜீவ நதியில் ஒன்றான பழையாற்றங்கரையில்  இக்கோவில் அமைந்துள்ளது. திராவிட பாணியில் சோழர்களின் கலை வண்ணத்தில் இக்கோவிலின் ராஜ கோபுரம் காணப்படுகிறது. 
     
        இக்கோவிலில் குடியிருக்கும் சுவாமியின் பெயர் தாணுமாலயன்.              தாணு-சிவன், மால் -திருமால், அயன்- ப்ரம்மா மூன்று கடவுளும் ஒன்று சேர்ந்த லிங்க வடிவமாய் காட்சி தருவது இக்கோவிலின் சிறப்பு. மேலும் ராமபக்தன், சொல்லின் செல்வன் அனுமனின் சிலையும், கோயிலில் உள்ளது. கோவில் பற்றிய சிறப்பு பதிவு வரும் பதிவுகளில் இடம்பெறும். இந்த பதிவு அண்மையில் (10-01-2017) நடைபெற்ற மார்கழி பெருந்திருவிழாவின் கடைசி நாள் நிகழ்வான திருத்தேரோட்டம் பற்றியது..


கோவில் முகப்பு வாசல் முன்னே- in front of Suchindram temple  

        கோதை நாச்சியார், ஆண்டாளுக்கு பிடித்த மாதமான மார்கழியில், சுசீந்திரம் கோவில் திருவிழா நடைபெறுகிறது, கோவில் கொடியேறி பத்து நாட்களுக்கு விழா கொண்டாட்டம், திருவிழாவில் முக்கிய நிகழ்வு மக்கள்மார் சந்திப்பு ஆகும். சிவனின் மைந்தர்களான விநாயகன்,  குகன் (முருகன்) தனது தந்தையை சந்திக்க வரும் நிகழ்வே மக்கள்மார் சந்திப்பு. பத்தாம் நாள் திருவிழாவில் தேரோட்டமும், தேரோட்ட தினத்தன்று இரவில் நிகழும் சப்தாவர்ணமும் சிறப்பு நிகழ்ச்சிகளாகும். "சத்தாவர்ணம் பாத்தா செத்தாலும் மோட்சம் கிட்டும்" என்பது இங்கு வழங்கும் பழஞ்சொல். தேரோட்ட தினத்தன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது.

 தெருக்களில் தேரோட்டம்-Chariot in Suchindrm Street

திருத்தேரின் பிரம்மாண்டம் - a View of Big Chariot 

 Suchindram Sri Thanumalayan Chariot 

          சுசீந்திரம் தேரோட்டம் கொடியேறியதுமே, நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள நாஞ்சில் நாட்டு கிராமங்களும் உற்சாகம் கொள்கின்றன, வண்ண வண்ண நிறங்களில் மனம் மயக்கும் கடைகள், சிறுவர்களுக்கான ராட்டினம், விளயாட்டு பொம்மை கடைகள், பதின்ம சிறுமியர் விரும்பும் வளையல், பொட்டு, பாசி கடைகள், மனம் விரும்பும் மலை ஆரஞ்சு, கடித்து மகிழ கரும்பு, குடித்து மகிழ இலவச பானகாரம் (பானகம்), மோர்.  குழந்தைகள் முதல் பெரியவர் வரை ருசித்து மகிழும், இனிப்புசுவையை எக்கச்சக்கமாய் அள்ளி வழங்கும் தேன்குழல்,  மிட்டாய் கடைகள், சம்பங்கி, கொழுந்து வாசனை கமழும் தெருக்கள் , பத்து நாட்களும் இசையும், தமிழும் கோவிலை சுற்றியே கிடக்கும், குளிரை பொருட்படுத்தாமல் முழு விழாவை  ரசிக்கும் மக்கள் என விழாக்கோலம் பூணும் சுசீந்திரம் நகர். 


தேர் அசைந்து வருகிறது- A Crowd of People and Chariot 



வெள்ளி அன்ன வாகனத்தில் சுவாமி -Silver Swan Palankeen with Swami 
             
              நாஞ்சில் நாடு என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வருபவர் தமிழுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆளுமை எங்கள் ஆசான். திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். அவர் சுசீந்திரம் பற்றியும், அதனை மையப்படுத்திய பல கதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவரின் புகழ் பெற்ற சிறுகதையான கிழிசல் தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது பக்கம் எண் 232-ல், படித்து சுசீந்திரம் விழாவை நேரில் கண்டு மகிழுங்கள்..
நாஞ்சில் நாடன் அவர்களின் கிழிசல் சிறுகதை படிக்க

எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் -Famous Tamil Writer. Mr. Nanjil Nadan 

நாஞ்சில் நாடன் எழுத்துகளை வாசிக்க.. நேசிக்க..இணைய முகவரி 
வெள்ளிக்குதிரை வாகனத்தில்- Silver Horse Palankeen with Swami 

              தேரோட்ட நிகழ்வை குமரி மாவட்ட பண்பலை வானொலியான (Kumari FM 101) நேரலை செய்தது, பண்பலை அறிவிப்பாளர் திரு.சுகுமார், பலத்த கூட்ட நெரிசல்களுக்கிடையேயும், கோவில் சிறப்பையும், தேர் திருவீதியில் செல்லும் அழகினையும்,  விழாவை காண வந்திருந்த பக்தர்களிடமும், குறிப்பாக ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளிடமும்  விழாவை பற்றி பேட்டி எடுத்து  கலகலப்பாக்கினார்.

குமரி பண்பலை அறிவிப்பாளர் அண்ணன் சுகுமார்- Kumari FM 101-Announcer Mr. Sukumar's Live Commentary on Chariot Festival at Suchindram

மக்கள் வெள்ளத்தோடு நேரலை செய்த போது -Kumari FM 101-Announcer Mr. Sukumar's Live  Running Commentary on Chariot Festival at Suchindram 

தேரோட்டத்தை காண வந்திருந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேட்டி கண்ட தருணம்- Kumari FM 101-Announcer Mr. Sukumar's Live few words from The German Tourists 

தேர் செல்லும் திருவீதி- Chariot in Suchindram Streets 

          தேர்திருவிழாவை புது மணம் முடித்தவர்கள் காண வேண்டும் என்பது இங்குள்ள வழக்கு, அதிகளவில் புதுமண தம்பதிகள் அதிகம் வந்திருந்தனர்.                                
 சுசீந்திரம் -கன்னியாகுமரி புதிய  பாலம் கட்டி முடித்த சாலையோரத்தில், மண் பானையில் வைத்திருந்த கூழ் கடையில், தம்பிகளோடு கம்மங் கூழ் குடித்து விட்டு, டிசம்பர் 26-2014 ஆழிப்பேரலை தினத்தில் நடந்த தேரோட்டத்தை பற்றி பேசிக்கொண்டே புறப்பட தயாரானோம் ..

           


சத்தான ருசியான கம்மங் கூழ் - Millet Pooridge

ருசியான கம்மங் கூழுடன் தம்மி - Selfie with Millet Pooridge

ருசியான கம்மங் கூழ் குடித்து, அருமை தம்பிகளோடு ஒரு  தம்மி- Selfie with Millet Pooridge

திரும்பவும் இரவு நடைபெற்ற சத்தா வர்ண நிகழ்வை பார்க்க வந்தபோது..
மஞ்சள் கிரேந்தி பூ அலங்கார அழகில்- Beauty of Yellow Flowers with Swami

சுவாமிகளின் அருள் வழங்கும் சத்தாவர்ண காட்சி கைபேசி ஒளிவெள்ளத்தில் - Sapthavarna Event in Suchindram Chariot Festival 
         சப்தாவர்ணம், ராத்திரி நடைபெறும் முக்கிய நிகழ்வாகும், தாணுமாலயனை (சிவனை) சந்திக்க வந்திருந்த மக்கள்மார் தத்தம் கோவிலுக்கு பிரிந்து செல்லும் நிகழ்ச்சி ஆகும், நாஞ்சில் நாட்டின் புகழ் மிக்க  இருபதுக்கும் மேற்பட்ட  நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இசை முழக்க, பல்லக்கில் வீதி உலா வரும் சுவாமிகள் அந்த இசையில் லயித்து மயங்குவர்.  இறுதியில் வாசிக்கப்படும் கப்பல் மேளம் ரசிக்கத்தக்கது, அதை கேட்டே பல நாள் மகிழலாம், பல்லக்கு தூக்கும் கலைஞர்களின் கை வண்ணம், கால் வண்ணத்தில் தாணுமாலயன் தட்டழியும் நிகழ்வு, பார்ப்போர் உள்ளத்தை கலங்க வைத்தது, கலங்கிய கண்களோடு  மக்கள் கூட்டமும் கலைந்தது. 


பயணம் தொடரும்...


How to Reach Suchindram

 through fly- Nearest Airport- Thiruvananthapuram International Airport, Thiruvananthapuam, Kerala

Nearest Railway Station- Nagercoil & Kanyakumari Railway Station

Through Buses - From Thiruvanathapuram- Nagercoil (Vadasery) or Anna Bus Stand Meenakshipuram, Nagercoil - Suchindram (Bus Route from Vadasery-01,02,03 (A, B, C, D, E, F, G, H, 1K, 2K), FP-303, 505.

Nearest Tourist Spots: 

1. Land End Kanyakumari (Cape Comorin),
2. Bharath Matha Temple, Vivekanandhapuram
3. Nagercoil Nagaraja Temple ( Capital of Kanyakumari District)
4. Sotthavilai Beach
5. Manakudi Birds Sanctuary 
6. Ayya Vaikunda Swamy Temple, Swamithoppu
7. Puthalam, Birds Park
8. Theroor Paddy Fields ( Birth Place of Kavi Mani. Mr. Desika Vinayagam Pillai)


சுசீந்திரம் வந்தடையும் வழிகள் 
வான் வழி - திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் 
ரயில் வழி- நாகர்கோவில் தொடரி நிலையம் (ம) கன்னியாகுமரி தொடரி நிறுத்தம்.

தரை வழி - மதுரை, திருநெல்வேலி வழியாக பயணிப்பவர்கள், வடசேரி (நாகர்கோயில்) புற நகர் பேருந்து நிலையம் வந்து, கன்னியாகுமரி செல்லும் பேருந்தில் (தடம் எண் -01,02,03,A,B,C,D,E,F,G,H,1k,2K) 303, 505,  பயணிக்கையில், சுசீந்திரம் வந்தடையலாம் அல்லது உள்ளூர் பேருந்து நிலையமான அண்ணா பேருந்து நிலையம் (குளத்து பஸ் ஸ்டாண்ட்), சென்று 30, 33C, 33, மற்றும் சிற்றுந்துகளில் பயணிக்கலாம்..

சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் 
1. கன்னியாகுமரி 
2. விவேகானந்தபுரம் பாரத மாதா கோவில், கேந்திரம் 
3. சொத்தவிளை கடற்கரை 
4. மணக்குடி பறவைகள் குடில் 
5. அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி, சுவாமிதோப்பு 
6. அருள்மிகு நாகராஜா கோவில், நாகர்கோவில் 
7. புத்தளம், உப்பளம், பறவைகள் குடில் 
8. கவி மணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த  தேரூர் மற்றும் அங்கு கண்ணுக்கு அழகை தரும் நெல் வயல்கள். 





நேசமுடன் 
இளங்கோ கண்ணன்.

Thursday 5 January 2017

தேக்கடி பருந்தும்பாறை (பருந்து பாரா )- Thekkady-Parunthumpara (Eagle Hill)

Thekkady-Parunthumpara Trip

                கேரளாவின், குமுளி  நகரின் மண்  மணம் எம்மை வரவேற்றது, ஆமாங்க.. சில் லென்ற மழை தூற்றல்..  தமிழும், மலையாளமும் கலந்து புழங்கும் இடம், கடைகளின்  பெயர் பலகைகள் இரு மொழிகளிலும் இருந்தன. அதிக அளவில் ஏலம், கிராம்பு, நல்ல மிளகு என்ற குறுமிளகு, திப்பிலி, கருவாப் பட்டை, தக்கோலம், ஜாதிக்காய், காப்பி, போன்ற நறுமணப் பொருள்கள் கிடைக்கும் கடைகள், குறிப்பாக மணம் வீசும் தேயிலை, அதிலும் பல ரகங்கள் (கிறீன் டீ, லெமன் யெல்லோ டீ, டயட் டீ) ஏலக்காய் மணத்துடன் திகழும் தேயிலை வாசம்  நம்மை கிறக்குகிறது. அது மட்டுமில்லாமல்  சேரநாட்டு  ஸ்பெஷல், தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கும்,  எத்தன் வாழைக்காய் வத்தல் ( சிப்ஸ் ) கடைகளும் நிறைய உள்ளன... 

                 கேரளாவில் பொதுவாக, எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற  வழி கேட்பது சிரமம் மிகுந்தது, சில மலையாளத்து  சேட்டன் மார்கள் தமக்கு தெரியாது என்று மறுமொழிவதும், சில பேர் நம்மிடத்து  தவறான  வழி சொல்லி  நம்மை பயணிக்க சொல்வது, சில வேளைகளில் சுகம், சில நேரம் எரிச்சல். எனவே கொஞ்சம் கவனத்துடன் வழி கேட்பது நல்லது, நம்ம கூகிள் மேப் சில வேளைகளில்  தவறான வழியை காட்டும் கவனம் தேவை. எமக்கு சில தமிழ் நண்பர்கள் உதவினர்.. அவர்கள் உதவியோடு எமக்கான ஹோட்டலை ( கிறீன் லீப் பெரியார்  Green Leaf Periyar- Home Stay என்ற ஹோம் ஸ்டே, கோ ஐபி போ தேடி கொடுத்தது) அடைந்தோம்..

தேக்கடி,  நகர காட்சி. An Evening Scenery in Thekkadi Junction, Kerala

                  பாலசுக்குஒரு மணி நேர ஓய்வு கொடுத்துவிட்டு,  பெட்ரோல்  நிரப்பினோம். விடுதி நண்பரிடம் கேட்டு விட்டு, தேக்கடியிலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ள அழகிய இடமான  பருந்தும்பாறை (பருந்து பாரா ) நோக்கி பறந்தோம்.  பயணிக்கும் வழிகள் எங்கும் மலை மேல் நிற்கும் மரங்கள் நம்மை வரவேற்கின்றது,  தேக்கடி-பெரியார்-வண்டிப்பெரியார்- இந்த ஊர்களை கடந்து வந்தால் பருந்தும் பாறைக்கு செல்ல வழி கிடைக்கும்.. பச்சை பசுமை.. வெண்  மஞ்சு பொதியல் நிறைந்து கிடைக்கும் தேயிலை தோட்டங்கள்.. மாலை 4 மணிக்கே சூரியன் சென்ற இடம் தெரியவில்லை, மெல்ல இருள் சூழ்கயில் பருந்தும் பாறை எத்தினோம். 


பருந்தும் பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள். A Tea Plantation in Parunthmpara Hill Way


ஒரு அழகிய வீடு.  A House in Vandiperiyar, Kumily

        பருந்தும் பாறா செல்லும் சாலை எங்கும் தேயிலை தோட்டம்..கேரளா ஓட்டு வீடுகள், வீடுகளை சூழ்ந்த தெங்கு, கமுகு, இம்மரத்தில் படர்ந்திருக்கும் வெற்றிலைக் கொடிகள், என பசுமையான சூழல், சில வீடுகளில்  சமையலுக்கு தேவையான காய் கறித்தோட்டம்,  பெரும்பாலான வீடுகளில் கப்பை என்று அழைக்கப்படும் கிழங்கு (ஏழிலைக் கிழங்கு, மரச்சீனி)  காணப்படுகிறது, பொதுவாக கேரளத்தில் கப்பையும் , மத்திக்கறியும் பிரதான உணவு ஆகும், இம்மக்களிடையே 1950-60 களில் சொந்த ஊரில் ஏற்பட்ட பஞ்சம், வறுமை காரணமாக, தேயிலை தோட்டத்திற்கு  வேலைக்கு சென்ற நம் மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர், அவற்றில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரும்பான்மையினர், அவர்கள் பேசும் தமிழ் வழக்கு ரசிக்க தக்கது.. .  

 தேயிலை தோட்டத்திலே. Ryder Elango in Tea Plant


in front of Tea Plant

                  வெண்முகில்கள் பயணிக்கும்  இப்பாதையில், மனிதர் நமக்கு சற்று கடினமாகவே உள்ளது, திக முட்டு (மூச்சு திணறல்) வருமா? என கேட்க வேண்டாம், நம் பயணம் செல்லும் சாலை, சில பகுதியில்  தார் மறைந்து, சவண்டு கிடக்கிறது, கவனம் வேண்டும்.  பகல் நேரத்திலே இருள் சூழ்ந்து கிடக்கிறது காடு, இந்த சாலையில் ஏதேனும் தேயிலை பேக்டரிக்கு செல்லும் ஒன்றிரெண்டு வாகனங்கள், ஜீப், சுற்றுலா வாகனம்  தவிர வேறு போக்குவரத்து இல்லை. ஆரண்யத்தின் அமைதி, நம்மை சில நேரத்தில் அச்சமூட்டுகிறது. இந்த இடங்களில் வசிக்கும் மனிதர்கள், குழந்தைகள், மிகுந்த தைரியம் உடையவர்கள்.

பருந்தும்பாறை நெருங்கும் வழி. Via go through Parunthumpara (Eagle Hill)

 கேரளா சட்டமன்ற தேர்தல் 2016-பீர்மேடு தொகுதியில்  அ இ அ தி மு க கட்சி பதாகை.  An AIADMK Poster for Kerala Assembly Election-2016 in Peermedu Legislative 
   
      பருந்தும் பாறைக்கு செல்லும் வழி தெற்றி எங்கேயோ போய்க்கொண்டிருந்த எங்களை தடுத்து நிறுத்தி சரியான வழி சொல்லி கொடுத்தார் ஒரு தமிழர். அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு அடைந்தோம்.மஞ்சு பொதியல் களுக்கிடையே வழியை கண்டுபிடிப்பது சற்றே சிரமமாயிருந்தது, view point என்னும் இடம்  அத்தனை அழகு, கடல் அலையை போன்றே வேகமாக நம்மை முத்தமிடும் மேக குவியல்கள், ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விடலாம், புல்வெளி எங்கும் பூத்திருக்கும் முகிலோடு புகைப் படம் எடுக்கும் ஆசை தீராது, கொஞ்சும்  குளிரில் ஐஸ் கிரீம் குடிக்கும் இன்பம் எழுத்தில் அடங்காது,  பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தில் இந்த இடம் வந்தாக ஒரு நண்பர் சொன்னார், அதை  கோடை காலங்களில் கண்டு மகிழலாம். ( நாங்கள் சென்றது மே மாத துவக்கத்தில்.. சில ஒளிப்படங்கள்  )  

இதுதாங்க அது .  Parunthumpara View Point

மஞ்சு பொதிகள் நடுவே. Cloudy Walk

அங்க எதுவுமே தெரியல .., அவ்வளவு மஞ்சு.. ஆனாலும் ரசிப்போம் 
சில கார்கள் ..Parunthumpara Parking Area

புல்வெளி அதில் மேகங்களுடன் ஒரு நடை .. An Walking With Mist

ஓர் ஆனந்த தருணம்..

பனிக்காட்டில் .. ஓர் பாறையில் 

குளிரில் பனிக்கூழ்  குடிக்கும் ஓர் இன்ப பொழுது 
இங்கேயும் சில மரங்கள் உண்டு Nature Beauty

        காலை பொழுதில் சூர்யோதயம் காண்பதை விடவும் மலை நேர சூரியன் மறையும் காட்சி இங்கு காண்பது சுகம், மலைத் தொடர்களுக்கிடையில் விழும் கதிரவன் மாயாஜால வர்ணங்கள் பூசி வானில் வண்ணக் கோலம் படைப்பதை காண கண் கோடி வேண்டுமே..உங்கள் நேரத்தை பொறுத்தே அது அமையும், அதற்குள் மஞ்சு கூடிவிட்டால் பார்ப்பது கடினமே, இந்த வியூ பாயிண்ட்  (View Point)           பகுதியின்  விளிம்புகளில் நின்று மேக கூட்டங்களோடு கதை பேசுதல் ஒரு தனி சுகம்.. நண்பர் கூட்டத்தோடு சென்று பேசினால் உங்களை வேறு பெயரில் அழைப்பார்கள். எப்படியும் உங்கள் நேரத்தை பயனுள்ள வழியில் செலவு செய்ததை இந்த பருந்தும் பாறை பயணம் தரும்.. நிறைவாக செல்லலாம்.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இந்த ஆண்டு இம்மலை பள்ளத்தாக்குகளில் பூத்துள்ளதாக செய்தி தாள்களில் வந்துள்ளது முடிந்தால் அதையும் ஒரு கிளிக் எடுத்துக்கொண்டு வாருங்கள்..

(கேரளாவில் நீலக்குறிஞ்சி மலர்கள் வாகமண், பருந்தும்பாறை, மீசைபுலிமலை, மூணாறு போன்ற வன மலைப்பகுதிகளில்   பூக்கின்றன )
       
        ஒரு மணி நேரம் கழித்த பின், மஞ்சுக் கூட்டங்கள் அதிகமானதால், இருள் சூழ்ந்து விட்டதாலும், மலையிலிருந்து இறங்கினோம்.. புகையில் 200 வாட்ஸ் வெளிச்சம் கூட ரொம்ப மங்கலவே தேய்ந்தது, கேரளா நாட்டிளம் பெண்கள், தத்தம் நண்பர்களோடு கோலாகல பயணம் செய்து, ஊளையிட்டு, பாட்டு பாடி எங்களை முந்திச்சென்றனர், வழியில் ஜியோ ஸ்பைசஸ்(Geo Spices), என்ற கடையில் சூடான சாயா, பல்கூசும் பனிக்கூழ் குடித்து, வழி மாறி செல்லாமல், மலை திரும்புகையில் பாம்பனார் செல்லும் வழியில் சென்று, பீர்மேடு சந்திப்பில் சேர்ந்தோம்.. 




Bye Bye Parunthumpara (Eagle Hill)




பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்.