Wednesday 23 November 2016

மகா கவி பாரதியின் இல்லம் தேடி... ( A Trip to Maha Kavi Bharathiyar's House)

தமிழ்க்கவிதையின் தலை மகன் பாரதி ...

"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லயே 
உச்சிமீது வான் இடிந்து விழுகின்ற போதிலும்"...
என்று   வீரம்  கொண்டு பாடி, நாட்டு மக்களின் விடுதலை உணர்வை தூண்டி, சுதந்தர போராட்டத்தில் தமிழக மக்களை பங்கு கொள்ள செய்ததில் பாரதிக்கு ஒரு தனி இடம் உண்டு... 

தமிழகத்தின், நெல்லைச்  சீமையில் ( தற்போது தூத்துக்குடி மாவட்டம்) எட்டையபுரம் ஊரில் டிசம்பர் 11, 1882ல் பாரதி பிறந்தார், இவரின் தாய்: இலக்குமி அம்மையார், தந்தை: சின்னசாமி அய்யர், இயற்பெயர்: சுப்பையா, என்ற சுப்பிரமணியன்,  தனது ஐந்து வயதில் தாயை இழந்த அவர் தனது பாட்டி பாகீரதி அம்மாவின்  அரவணைப்பில் வளர்ந்து வந்தார்..சிறு வயதில் பள்ளிப் பாடங்களில் விருப்பு இல்லாமல் இருந்து வந்தார்  , உழைக்கும் மக்கள் பாடும் வயலோர பாடல்கள், சுண்ணாம்பு இடிப்போரின் சுவை மிகுந்த பண்களிலும் , இனிய குயிலின் கூக்கூ வெனும் ஒலியினிலும், வண்டிக்காரர் பாடும் பாட்டினிலும், கோலமிடும் பெண்கள் பாடும் கும்மிப்பாடல்கள், கீர்த்தனைகள் போன்றவற்றில் மனதை பறிகொடுத்து, கவி புனையும் திறனை வளர்த்துக் கொண்டார்..

எட்டையபுரம் ஜமீனின், அன்புக்கு பாத்திரமாய் திகழ்ந்தார், தனது பதினோரு வயதில் கவி புனையும் ஆற்றலால் பாரதி என்னும் பட்டம் பெற்றார், இந்த பட்டத்தை அவருக்கு கொடுத்தவர் எட்டையபுரம் ஜமீன்.  பாரதி சின்னப்பயல் என்று ஈற்றடியில் முடியுமாறு ஒரு பாடல் சொல்லு என காந்திமதிநாதன் கூற, எட்டையபுரம் மன்னர் முன்னிலையில், பாரதியின் டைமிங்  வரிகள் இவை  

காரது போல் நெஞ்சிருண்ட  
காந்திமதி நாதனைப் பார்-அதி (பாரதி) சின்னப்பயல்.

மரபு கவிதை பாடிவந்த, தமிழ் இலக்கியத்தில்  புதுக்கவிதை   என்ற அத்தியாயம் பாரதியோடு துவங்குகிறது, எனலாம், உயர் மேடைகளில் முழங்கி வந்த கவிதை கருவியை எளிய மக்களை நோக்கி திசை திருப்ப செய்தவர் பாரதி..


அக்கினி குஞ்சொன்று கண்டேன், 
அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் 
வெந்து தணிந்தது காடு..வெந்து தணிந்தது காடு...
தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டோ..?... 

என தத்தரிகிட... தத்தரிகிட.. தித்தோம் என முழக்கமிட்டவன்.. தமிழகத்தின். அக்கினி குஞ்சாய் கவிதைகளை நமக்கு கொடுத்தவன்...

நல்லதோர் வீணை செய்தே- அதை 
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ..

சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகும் 
அறிவுடன் படைத்தது விட்டாய்..
வல்லமை தாராயோ.. இந்த மாநிலம் 
பயனுற வாழ்வதற்கே... 

என்று முழு வாழ்வையும் நாட்டுக்கே வாழ்வதற்கு, வல்லமை கொடு என சிவசக்தியை கேட்டவன் பாரதி ஒருவனே..


Bharathi's House a View 


      கோவில் பட்டி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், கரிசல் வயல் பூமிகளை கடந்து சென்றால், எட்டையபுரம் நகரை அடையலாம், ஊரின் வரவேற்பாய், தமிழக அரசின் பல் தொழில்நுட்ப கல்லூரியின், வாயில் மதில்களில் பாரதியின் கவிதைகளும், அரிய வகை படங்களின் ஓவியங்களும் நம்மை கவர்ந்து, பாரதியின் தீப்பொறி பாடல்கள், நம் உதடுகளில்  உச்சரிக்க துவங்குகின்றன ..

    எட்டையபுரம் பள்ளிக்கூடத்தின் மைதானம் அருகில், மகாகவி பாரதியின் மணி மண்டபம் உள்ளது. அங்கு  பாரதியின் முழு உருவச்சிலை, கம்பீரமாக நிற்கின்றது. பாரதியின் வீடு அமைந்துள்ள தெரு இன்றும் பழமை மாறாமல் இருக்கின்றது. ஊரெங்கும் மணம் வீசும் வேப்ப மரங்கள் தரும் இனிமையான காற்றும், சில நிழல் தரும் மரங்களின் நிழலும் நம்மை வழி நடத்துகின்றன .. அவர் நடந்த மண்ணில் நாமும் நடப்பது ஒரு பெருமை தரும் அம்சமாகும்... 

      பாரதியின் தெருவில் (பாரதி வீதி ) நடந்து, அவர் வீட்டை பார்க்கையில் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது நமக்கு, அது ஏன்...? கவிதையில் காதல் கொண்டு, நாட்டு விடுதலைக்கு பாடு பட்டு, பெண்ணுரிமையின் பெரும் குரலாய் ஒலித்து, சாதி கொடுமைக்கு எதிராய் பாடிய பாரதியின் இல்லம், எளிமையின் அடையாளமாய் திகழ்கிறது, ஓட்டுப்பணி செய்த பனங்கம்புகள், மோட்டு ஓடுகளை தாங்கி நிற்கின்றன.. திண்ணை அமைத்து பெரிய ஜன்னல்களோடு, அய்யர் வீடுகளை போன்றே அழகாய்  இருக்கின்றது..

  வீட்டில் அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது, நாங்கள் அவ்வீட்டிற்கு சென்ற நேரத்தில், ஒரு குடும்பத்தினர் (தாத்தா,பாட்டி, பேரன்) பாரதியின் பாடல்களை பாடி நம்மை பரவசப்படுத்தினர், நாம் அங்கு செல்லும் போது அவரின் பாடல்களை பாடி அவருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பது எம் அன்பான வேண்டுகோள்..  ...
எங்கள் காதினில் ஒலித்த பாடல்  

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
செல்வக்களஞ்சியமே..
என்னைக் கலி தீர்த்தே உலகில்
ஏற்றம்  புரிய வந்தாய்...

பாடலின் இனிய வரிகள் சில  

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி 
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி 


கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் 
கள்வெறி கொள்ளுதடி..
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன் மத்தம் ஆகுதடி..

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ..

 படித்த பாடலின் வரிகள் தமிழ் திரைப்படத்தின் பாடல்களிலும், சில படத்தின் தலைப்புகளாகவும் வந்து நமது நெஞ்சங்களின் பதிந்துள்ளது.

பாரதி சுதந்தர தாகம் கொண்டு பாடிய பாடலின் வரிகள் இன்றும் நடைமுறைக்கு ஒத்துப்போகின்றன
அன்று அவன்
"சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்காரடி   கிளியே...
செம்மை மறந்தாரடி: ...
என்று நமது மக்களின் எண்ணத்தை படம் பிடித்தவன் ..


மகாகவி பாரதியின் இல்லத்திலுள்ள மார்பளவு சிலை 
"சாதி மதங்களைப் பாரோம்- உயர் 
ஜன்மம்  இத்தேசத்தில் எய்தினர் ஆயினும் 
வேதியர் ஆயினும் ஒன்றே அன்று 
வேற்று குலத்தினர் ஆயினும் ஒன்றே"..
என்று அப்போதே நிலவி வந்த சாதி கொடுமை வேரறுக்க பாட்டு என்னும் தீப்பொறியால் சாதி வைக்கோலை சாம்பலாக்க சபதம் பூண்டவர் பாரதி.

சாதி, பேதம், பார்ப்பது கிள்ளை பருவத்திலே நுள்ளி ஏறிய வேண்டும் என்பதன் அவசியம் உணர்ந்து பாப்பா பாடலை எழுதினார்..
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

என எழுதியதோடு மட்டுமின்றி, சாதி கொடுமை தீர  புரட்சியும் செய்து காட்டியவர், என்ன புரட்சி செய்தார் என கேள்வி எழுகிறதா..?
ஆதி திராவிட இனத்தை சேர்ந்த ரா. கனகலிங்கம் என்பவருக்கு உயர் பிராமணர்கள் அணியும் பூணூலை அணிவித்து, மக்கள் அனைவரும் சமம், ஏற்றத் தாழ்வுகள், என்று ஏதும் இல்லை என முழங்கியவர்,  இந்த வாட்ஸப் காலத்திலே சாதியின் கொடூரம் குறைந்த பாடில்லை, அக்காலத்தே புதுமை புரிந்த பாரதியின் இந்த தீரச்செயல் போற்ற தக்கதே..! 

"சாதிப்பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் 
நீதிப்பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் 
சாதிக்கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழித்திடும் வையம்"

சாதியை  அழித்து ஒழிக்க அன்பு  ஒன்றே போதும் என அறைகூவல் விடுத்தவர். 

ஆதி திராவிட இனத்தை சேர்ந்த ரா. கனகலிங்கம்- பாரதியின் வீட்டிலுள்ள படம் 


A Set of Photos 1st Ira. Kanagalingam

சாதி கொடுமையை எதிர்த்த  பாரதி, அந்நாளில் நிலவி வந்த  பெண்ணடிமை என்னும் பெருங்கொடுமையை முதல் ஆளாய் கண்டித்தார்.
" பெண்ணுக்கு ஞானத்தை  வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி காட்சி கெடுத்திடலாமோ..?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்.."

பெண்கள் ஆனந்த கும்மியில்

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்..

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு 
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் 
வற்புறுத்தி பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் 
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்... 

காத லொருவனைக் கைப்பிடித்தே அவன் 
காரியம் யாவினும் கைகொடுத்து 
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும் 
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி... 
                                        

      
ன பெண்களின் கற்பு, காதல் மணம், ஆண்  பெண் சமம் என்னும் புதிய விதி செய்தவர் பாரதி, 

      தனது எழுத்துக்களை, சுதேச மித்ரன், இந்தியா  போன்ற பத்திரிகைகளில் வெளிப்படுத்தி, கருத்துப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர், கவிதைகள் மட்டுமின்றி, உரைநடை, மரபு, புதுக்கவிதை, விருத்தம், கட்டுரை, என்றும் தமிழ் உலகில் அனைவரும் அறிந்த கீதையை புதிய எளிய நடையில் மொழி பெயர்த்து பாஞ்சாலி சபதம் எனும் காப்பியம் செய்து தமிழ் அன்னைக்கு பெருமை சேர்த்தவன்...
      
       வால்ட் விட்மன், கலீல் ஜிப்ரான் போன்ற  மேலை நாட்டு கவிஞர் களுக்கு  நிகராக தமிழில் வசன கவிதையை உருவாக்கியவன்.   

Bharathi's Hand Written Letters


பாரதி எழுதிய வசன கவிதை

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
யுடைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும்
காயும், கனியும் இனியன. 
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் 
இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.


செத்துப் போவதை  இனிது என போற்றிய முதல் கவி பாரதி ஒருத்தன் மட்டுமே 


         செல்ல சிட்டுகளுக்காக (குழந்தைகள்) பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி படைத்தளித்தவன்.

        இன்று கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளை காக்க அன்றே பாடல் எழுதியவன், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அயல் மொழி பயின்றாலும் தமிழை உயர்வாய்  எண்ண வேண்டுமென எடுத்துரைத்தவன், வீட்டில் வளரும் கோழி, பசு, நாய், நம்மை தேடிவரும் காக்கை, இவற்றிற்கும்  அன்பு செலுத்துவாய், பண்பாய்   வளருவாய்.. என பாடம் படிப்பித்தவன்,  வரிகள் சில 

ஓடி விளையாடு பாப்பா, -- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, -- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
1

சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
2

கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
3

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
4

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, -- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, -- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
5

காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -- என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
6

பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
8

துன்பம் நெருங்கிவந்த போதும் -- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
10

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, -- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
12

வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
13

வேத முடையதிந்த நாடு, -- நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
14

சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி -- அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது
வாழும் முறைமையடி பாப்பா.

புதிய ஆத்திசூடி அனைவரும் படித்து பயன்பெறவேண்டிய நூலாகும்...
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=153
Bhathiyar's  Used Ragas in His Poems


பாடல்களில் நெஞ்சை பறிகொடுத்த பாரதி இசையிலும், இசை நுணுக்கங்களை, பாடலில் புகுத்தி, உயர் சாதியினர் கேட்டு ரசிக்கும் கர்நாடக இசை பாடல்களை, பாமரரும் பாடும் வண்ணம் தமிழில் பாடல் வரிகளை எழுதி ராகங்களை எளியவர் நாவில் நடம் புரிய வைத்தவர் ,

பாரதி எழுதிய  யது குல காம்போதி ராகத்தில் புகழ் பெற்ற பாடல் ஒன்று

காக்கை சிறகினிலே நந்தலாலா.. நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா..

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா.. நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா..

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா.. நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்தலாலா...

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா... நின்னை
தீண்டும் இன்பம் கிடைக்குதடா நந்தலாலா..


Bhathi's House Wall Phots

பாரதியின் புரட்சி பாடல்கள் பற்றி எழுதிவிட்டு, அவன் கவிதை காதலி கண்ணம்மாவைப் பற்றி எழுதாது போனால் பல ஏச்சுகளை நான் வாங்க வேண்டியிருக்கும். செல்லம்மாவை மணந்த போதும் அவன் மனம் கண்ணம்மா என்கிற  காதலியோடு அவன் கவிதை பயணித்தது.. (ஒரு வேளை செல்லம்மாவையே கண்ணம்மா என கொள்ளலாமோ..!) நண்பர்களே இனி தொடர்வது பாரதி- கண்ணம்மா கவிதைகள்.

காற்று வெளியிடை கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்..

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா..
தன்னையே சசி என்று சரணம் எய்தினேன்..

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசடி ..
வந்து சேராயோ.. கண் பாராயோ...
கண்ணம்மா... கண்ணம்மா....

நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா..
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போ என்று
நின்னை சரண் அடைந்தேன் கண்ணம்மா..

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்கு பாட்டினிமை நானுனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர்
எண்ணமில்லை நின் சுவைக்கு
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா.....

சுட்டும்விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ...
வட்டக்கரியவிழி கண்ணம்மா..
வானக் கருமை கொல்லோ...

என பாரதியின் தாக்கத்தால் வந்த கண்ணம்மா என்னும் பெயர் தமிழ் பாடல்களில் பல வடிவிலும் வந்து நம்மை ரசிக்க வைத்தது.

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி.. (வண்ண வண்ண பூக்கள்)
கண்ணம்மா.. கண்ணம்மா.. (சேவல்)
சின்ன சின்ன கண்ணம்மா (பாரதி கண்ணம்மா)
கண்ணம்மா கனவில்லையா ...(விஷ்வ துளசி)

தற்போதைய ஹிட் நம்ம யுக பாரதியின்
கண்ணம்மா.. கண்ணம்மா அழகு பூஞ்சிலை.. (றெக்க )பட பாடல்..


பாரதியின் கவித்துமான வரிகளில் மனதிற்கு பிடித்தது..

கூடிப்பிரியாமலே ஓரி ராவெல்லாம்
கொஞ்சி குலாவி ஆங்கே ..
ஆடி விளையாடியே உந்தன்
மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான்
நல்ல கலி எய்தியேன்.
பாடி பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணிய தில்லையடி..

வறுமையில் வாழ்ந்த போதும் பொதுமையை போதித்த கவி பாரதி

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -- இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து -- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.


என்றும் 
பல மொழிகளை  கற்றுணர்ந்த  போதும் 
"யாமறிந்த மொழிகளிலே 
தமிழ் போல இனிதாவதெங்கும் 
காணோம்" என முழங்கியவன்.

(A Photo Frame of Maha Kavi Bharathi)

           பாரதி வீட்டை பார்க்கப்போய் பல பக்கம் அவரின் பாடல்களால் இக்குறிப்பை எழுதிவிட்டேன். கருத்தை  நீங்கள் தான் தெரிவிக்க வேண்டும், நாம் நாட்டு விடுதலை, நாட்டுவளம், கவிதை, சுதந்திர தலைவர்களின் வரலாறு, போன்றவற்றை விளக்கும் நம் முண்டாசு கவிஞன் வீட்டுக்கு குடும்பத்துடன், குழந்தைகளுடன் சென்று வாருங்கள் நண்பர்களே... 

      மேலும் எட்டயபுரத்தில், இஸ்லாமிய கம்பர் என அழைக்கப்படும் உமறுபுலவரின் மணி மண்டபமும் உள்ளது, அதைக் கண்டு தமிழ் மணம் நிறைந்து கிடைக்கும் ஊரில் தமிழை சுவைத்து வாருங்கள்.. 


கோல் கைக்கொண்டு நடை போட்ட பாரதி Bharthi's Photo

நிறைவாக பாரதியின் பாடலில் பல அன்பர்களால் அடிக்கோடிட்ட கவிதை ஒன்று..

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்..

இக்கவிதையை பாடல் வடிவில் கேட்க 
படம்: மகாநதி 
பாடல்- தன்மானம் உள்ள நெஞ்சம் 
பாடியவர்: உலகநாயகன் "கமல் ஹாசன்"
இசை: இளையராஜா 

http://www.starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=677


நேசமுடன்
இளங்கோ கண்ணன்.

No comments:

Post a Comment